Last Updated : 16 Nov, 2013 12:00 AM

 

Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

6 மாதத்தில் 30 கடலோரக் காவல் நிலையங்கள் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

“தமிழகத்தில் புதிதாக 30 கடலோரக் காவல் நிலையங்கள் 6 மாதங்களில் செயல்படத் தொடங்கும்” என்று கடலோரப் பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் உள்ளன. கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்த புதிதாக 30 காவல் நிலையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 26 காவல் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 27-வதாக கடலூரில் கடலோரக் காவல் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில எல்லையில் இருந்து, கேரளம் எல்லைவரை 40 கி.மீ. தொலைவுக்கு ஒரு கடலோரக் காவல் நிலையம் அமைக்கப்படும். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 4, திருநெல்வேலி மாவட்டத்தில் 2, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 கூடுதலாக அமைக்கப்படும்.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 32 போலீஸார் மற்றும் 4 படகோட்டிகள் நியமிக்கப் படுவர். தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஏற்கனவே 38 படகுகள் உள்ளன. இதில் 24 படகுகள் விரைவு படகுகளாகும். தற்போது கூடுதலாக 20 அதிவிரைவு படகுகளை வாங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவை மணிக்கு 35 முதல் 40 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. கடலில் 4 நாள்கள் தங்கி ரோந்து செய்யும் வசதி இருக்கும். புதிய காவல் நிலையங்கள் அனைத்தும் இன்னும் 6 மாதங்களில் முழுமையாக செயல்படும்.

இதனை தவிர கடற்கரையில் எந்த சூழ்நிலையிலும் செல்லும் 24 அதிநவீன வாகனங்கள் புதிதாக வந்துள்ளன. கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகின்றனர். கடலில் தத்தளித்த 81 படகுகளை இதுவரை மீட்டு, 160 மீனவர்களை காப்பாற்றியுள்ளோம்.

தமிழகத்தில் 1,076 கி.மீ. தொலைவுள்ள கடற்கரையில், 591 மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் கிராம விழிப்புணர்வு குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளன. கடற்கரையில் சந்தேகமான வகையில் படகு அல்லது நபர்கள் நடமாடினால் உடனடியாக போலீஸாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்து விடுவார்கள்.

தமிழக கடலோரப் பகுதி களில் கடத்தல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு மது கடத்தியதாக ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரிய கப்பலில் கடத்தி வரப்பட்ட 38 ஆயிரம் மது பாட்டில்கள் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன.

மீனவர்கள் எந்த உதவி தேவை என்றாலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரை 1093 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்” என்றார் அவர்.

ஆலோசனை

முன்னதாக, கடத்தல் வழக்குகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மா. துரை, கடலோர பாதுகாப்பு குழுமகண்காணிப்பாளர் வனிதா, கடலோரப் பாதுகாப்பு படை கமாண்டண்ட் ஆனந்தகுமார், சுங்கத் துறை உதவி ஆணையர் சக்தி, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வன பாதுகாவலர் தீபக் எஸ். பில்கி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x