Published : 13 Jan 2014 08:20 AM
Last Updated : 13 Jan 2014 08:20 AM

கம்பம் திமுக நகரச் செயலாளர் தற்கொலை: உள்கட்சி பிரச்சினையே காரணம் என சர்ச்சை

தேனி மாவட்டம், கம்பம் தி.மு.க. நகரச் செயலாளர் ஆர்.பி.ஈஸ்வரன் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் தீவிர விசுவாசி. அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டிய சுவர் விளம்பரத்தை மாவட்டச் செயலாளர் மூக்கையா நிர்பந்தப்படுத்தி அழிக்கச் சொன்னதால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த அழகிரி ஆதரவாளர்கள் கூறுவதாவது: மதுரை மாநகர தி.மு.க. கலைப்பு, அழகிரி

ஆதரவாளர்கள் சஸ்பென்ட் என தொடர்ந்து

அழகிரி ஆதரவாளர்களை கட்டம்கட்டி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்ததால் கடந்த சில நாள்களாகவே ஆர்.பி.ஈஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். அழகிரியால் பதவிகளை பெற்ற அவரது ஆதரவாளர்கள் பதவிகளைக் காப்பாற்ற ஸ்டாலின் பக்கம் சாய்ந்து வந்தனர். ஆனால், ஆர்.பி. ஈஸ்வரன் மட்டும் அழகிரி விசுவாசியாகவே அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். அதனால், மாவட்ட தி.மு.க.வில் அவருக்கு நெருக்கடிகள் வந்தன.

ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு இணையாக, தேனி மாவட்டத்திலும் அழகிரி பிறந்தநாள் வாழ்த்து சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்டி விழாக்கள் களைகட்டும். இந்த ஆண்டு அழகிரிக்கு கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால், அவரது ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்ட தயக்கம் காட்டினர். மாவட்ட தி.மு.க.வில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு அழகிரிக்கு போஸ்டர், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.

அதை பொருட்படுத்தாமல், அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கம்பம் நகரப்பகுதியில் ஆர்.பி.ஈஸ்வரன் விளம்பரம் செய்துள் ளார். அந்த விளம்பரத்தில் தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா பெயரையும் போட்டுள்ளார். அதில் தன்னுடைய பெயரும் இடம்பெற்றதால் அதிருப்தியடைந்த தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா, ஆர்.பி.ஈஸ்வரனை அழைத்து கண்டித்ததாகவும், மேலும், கட்சி தலைமையிடம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், வேறுவழியின்றி இரு இடங்களில் எழுதிய சுவர் விளம்பரத்தில் மூக்கையா பெயரை மட்டும் அழித்துள்ளனர்.

இதை வெள்ளிக்கிழமை மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களிடம் சொல்லி புலம்பி, "அண்ணனிடம் பேச வேண்டும், நேரடியாக பார்க்க முடியுமா?” எனக் கேட்டுள்ளார். அவர்கள், "ஏற்கெனவே கட்சி பிரச்சினையால் அண்ணன் சிக்கலில் இருப்பதால், ஓரிரு நாளில் நேரில் வந்துவிடுவார், திங்கள்கிழமைக்கு மேல் பேசிக் கொள்ளலாம், அதுவரை பொறுமை யாக இருங்கள்'' எனக் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதற்குள் தற்கொலை செய்து கொண்டார். கட்சி மேலிடம், போலீஸார் விசாரித்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்றனர்.

புற்றுநோயால் தற்கொலை

இதுகுறித்து தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையாவிடம் கேட்டபோது அவர், கூறுகையில், "மூன்று நாளுக்கு முன் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் உடலை பரிசோதனை செய்துள்ளார். அதில் லிவர் கேன்சர் இருந்ததாகத் தெரிய வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், வலியும் கூடுதலாக இருந்ததால் அவதிப்பட்டார். இனி நீண்டநாள் உயிருடன் இருக்க மாட்டேன் என அவருடன் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து சுவர் விளம்பரம் செய்யக் கூடாது எனக் கூறவும் இல்லை. எதையும் அழிக்க நான் அவரை கட்டாயப்படுத்தவில்லை. அதெல்லாம் தவறான செய்தி. திட்டமிட்டே தவறான செய்திகளை பரப்புகின்றனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x