அதிமுக கொடி கட்டிய வாகனங்கள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்

அதிமுக கொடி கட்டிய வாகனங்கள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்
Updated on
1 min read

ஜெயலலிதா நேற்று ஜாமீனில் விடுதலையானதை முன்னிட்டு, கர்நாடக மாநில எல்லையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்து அதிமுகவினர் சென்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூரில் உள்ள பரப்பனஅக்ரஹாரத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

நேற்று அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவை வரவேற்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிமுகவினர் கார் உள்ளிட்ட வாகனங்களில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறைச் சாலை நோக்கிச் சென்றனர். இதையொட்டி கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் அம்மாநில போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுக கொடிகள் கட்டிச் சென்ற சுமார் 250-க்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களைத் தடுத்து மீண்டும் தமிழகத்துக்கே போலீஸார் திருப்பி அனுப்பினர். இதனால் சிலர் பேருந்துகளில் பெங்களுர் சென்றனர். பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களுக்காக அதிமுகவினர் சென்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் எல்லையில் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in