Published : 20 Mar 2014 11:13 PM Last Updated : 20 Mar 2014 11:13 PM
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் 30 பேர் அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இம்முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக, சிவகங்கை தொகுதியில் அவருடைய மகன் கார்த்தி ப.சிதம்பரம் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஏழு முறை வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாதது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் 30 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வியாழக்கிழமை இரவு அறிவித்த வேட்பாளர்களில், பெரும்பாலும் வழக்கமான தலைவர்களும், அவர்களது வாரிசுகளும் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது எம்.பி.க்களாக உள்ள பி.விஸ்வநாதன், என்.எஸ்.வி.சித்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு, ஜே.எம்.ஹாரூண், மாணிக் தாகூர் ஆகியோர் மீண்டும் தங்கள் தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், ஆர்.பிரபு, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
ப.சிதம்பரம், ரங்கராஜன் குமாரமங்கலம், எம்.பி.அன்பரசு, ஜெயமோகன், நாசே ராமச்சந்திரன் மற்றும் எம்.கிருஷ்ணசாமி ஆகியோரது வாரிசுகளுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாருபாலா தொண்டைமான் ஒருவர் மட்டுமே பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.கே.வாசன், கே.வீ.தங்கபாலு ஆகியோர் தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று ஏற்கெனவே அறிவித்ததும் நினைவுகூரத்தக்கது.
தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர் (தனி), கன்னியாகுமரி, தருமபுரி, கரூர், பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) கிருஷ்ணகிரி ஆகிய 9 தொகுதிகளுக்கு ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாரயணசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
WRITE A COMMENT