

வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலா என்ற இடத்தில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கூடலூர் பஜாரில் 60 மில்லி மீட்டர், சின்னக் கல்லாறு, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர், நடுவட்டம் 20 மில்லி மீட்டர், பெரியாறில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
''அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பகலில் குறிப்பாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த காற்று வீசும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.