

சென்னை கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்த திருவொற்றியூர் மீனவர் சங்கர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், திருச்சினாங்குப்பத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் 9.6.2016 அன்று பைபர் படகில், சென்னை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடல் பேரலையால் படகு கவிழ்ந்ததில் திருவொற்றியூரைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் சங்கர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் சங்கர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஓரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.