Published : 22 Mar 2017 09:02 PM
Last Updated : 22 Mar 2017 09:02 PM

தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமனம்

தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு புதிய தலைவராக நீதிபதி டி.வி.மாசிலாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விகிதங்களை ஒழுங்குபடுத்தவும், கூடுதலாக கட்டண வசூலிலும், நன்கொடை வசூலிலும், ஈடுபடும் பள்ளிகளின் செயல்பாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ளவும், 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது.

அச்சட்டத்தின்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 அலுவல்வழி உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைமையாளர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும்.

ஏற்கெனவே,மேற்படி குழுவிற்கு நியமிக்கப்பட்ட தலைமையாளர், நீதிபதி எஸ். ஆர்.சிங்காரவேலுவின் பதவிக்காலம் 30.12.2015 உடன் முடிவடைந்த நிலையில் தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை மேற்படி குழுவின் தலைமையாளராக அரசு நியமித்துள்ளது. அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும்'' என்று தெரிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x