Published : 29 Nov 2013 09:30 AM
Last Updated : 29 Nov 2013 09:30 AM

மின்வெட்டுப் பிரச்சினையில் முதல்வர் நாடகமாடுகிறார்: தேமுதிக குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு மத்திய அரசுதான் காரணம் என முதல்வர் ஜெயலலிதா கூறுவது நாடகமாடும் செயல் என அவதூறு வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தே.மு.தி.க., கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரக்குமார் குற்றம்சாட்டினார்.

திருப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. கொள்கை பரப்புச் செயலாளரும், சட்டமன்றக் கொறடாவுமான வி.சி. சந்திரக்குமார் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சந்திரக்குமார் ஆஜரானர். அவரை மீண்டும் டிசம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.

இதன்பின்னர், செய்தியாளர் களிடம் சந்திரக்குமார் கூறியது:

மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியாது. மக்கள் மன்றத்தில் பேசினாலும் வழக்கு போடப்படுகின்றது. விஜயகாந்த் மீது 32 வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினையில் இருந்து முதல்வர் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசை வசைபாடிக்கொண்டிருக்கிறார். இது மக்களை ஏமாற்றும் செயல்.

தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்துவைக்கவில்லை. தமிழகத்தில் மின் பற்றாக்குறை தீர்க்கப்பட்டதாகச் சொல்லி தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது தே.மு.தி.க-வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத்தில் பாராட்டின என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x