திருப்பூர் மருத்துவர் சரவணன் மரணம்: உயர்மட்ட விசாரணை கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

திருப்பூர் மருத்துவர் சரவணன் மரணம்: உயர்மட்ட விசாரணை கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்
Updated on
1 min read

டெல்லியில் திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், ''திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கணேசன் என்பவரது மகன் டாக்டர் சரவணன், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. மேற்படிப்புக்காக சேர்ந்த 2 வாரங்களே ஆன நிலையில் கடந்த 10-ம் தேதி மர்மமான முறையில உயிரிழந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த அறையில் வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்ததாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. அவர் எந்த வகையிலும் தற்கொலை செய்தகொள்ள வாய்ப்பே இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் உயர்ந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் கடுமையான போட்டி நிலவக் கூடிய பிரிவில் முழுக்க முழுக்க தனது கல்வித் தகுதியின் அடிப்படையில் சரவணன் இடம் பிடித்துள்ளார். அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவர் மர்ம மரணம் அடைந்திருப்பது பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எனவே, சரவணன் மரணம் குறித்த உயர்மட்டக் குழு விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்'' என்று டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in