Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM

தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஆள் பற்றாக்குறை: பணிச்சுமையால் ஊழியர்கள் அவதி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். சுமார் 12 ஆயிரம் பணியிடங்கள் நிரபப்படாமல் உள்ளதால், பஸ்களின் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் புதிய பஸ்கள் வாங்கப்படுகிறது. இருப்பினும் பஸ்களில் முழுமையாக பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. இதனால் ஜன்னல்கள் உடைந்த நிலையிலும் கதவுகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும், பஸ்கள் செல்கின்றன.

ஆரம்பத்தில் 2 பஸ்களுக்கு ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப அலுவலர் உட்பட மொத்தம் 15 (ஒரு பஸ்சுக்கு 7.5 ஊழியர்) தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 2003-ல் அப்போது இருந்த அரசு ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி, தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 பஸ்களுக்கு 13 ஆக (ஒரு பஸ்சுக்கு 6.5 ஊழியர்) குறைக்கப்பட்டது.

தொழில்நுட்ப பிரிவில் 6,000 பேர் பற்றாக்குறைதமிழகம் முழுவதும் மொத்தம் 320 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இதில் தொழில்நுட்ப பிரிவில் சராசரியாக 9,500 பேர் இருக்கின்றனர். இந்தப் பிரிவில் மட்டுமே ஏறத்தாழ 6,000 காலி பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே, ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், சில போக்குவரத்துக் கழகங்களில் தொழில்நுட்ப பணியாளர்களை முன்பதிவு மையம், நேரக் காப்பாளர் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். இதனால், பஸ்கள் தினந்தோறும் முழுமையாக பராமரிக்கப்பதில்லை. அரசு பஸ்கள் ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகின்றன. அரசு பஸ்கள் தொடர்ந்து தீ விபத்தில் சிக்கி நாசமாகின்றன.

வேலைப் பளு அதிகரிப்பு

இது குறித்து போக்குவரத்து பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் புதிய பஸ்கள் மட்டுமே வாங்கப்படுகிறது. ஆனால், அனைத்து பஸ்களையும் ஓட்டவும், பராமரிக்கவும் புதிய ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் 5 சதவீதம் ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இருக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி திணிக்கப்படுகிறது. இதனால், பிரேக் டவுன் போன்ற காரணங்களால் பஸ்கள் சரியான நேரத்துக்கு பயணிகளை கொண்டு போய் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது’’ என்றனர்.

இது தொடர்பாக தொ.மு.ச. பொருளாளர் கி.நடராஜன் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் புதிய, புதிய பஸ்கள் வருகின்றன. ஆனால், போதிய அளவில் ஊழியர்களை நியமிப்பதில்லை. தற்போதுள்ள நிலவரப்படி ஓட்டுநர்கள் 3,000 பேரும், நடத்துநர்கள் 3,000 பேரும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால், பணியில் இருப்போருக்கு பணி பளு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், ஓட்டுநர்கள், நடத்துநர்களும் மனஅழுத்தம் உள்ளிட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

24 பஸ்களில் தீ

தொழில்நுட்ப பிரிவில் மட்டுமே சுமார் 6,000 பேர் பற்றாக்குறையாகவே உள்ளனர். இதனால் பராமரிப்பு பணிகளை முழுமையாக நடத்துவதில்லை. இதனால், பஸ்கள் பிரேக் டவுன் ஆகின்றன. பஸ்களில் தீ விபத்து ஏற்படுகின்றன.

கடந்த 2 மாதங்களில் மட்டுமே தமிழகம் முழுவதும் சுமார் 24 பஸ்கள் தீயில் கருகியுள்ளன. அதுபோல், பணிமனை மற்றும் நேரகாப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இந்த பிரிவில் மட்டுமே சுமார் 6,500 பேர் பணியாற்றி இருந்தனர். இப்போது வெறும் 1,600 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். ஒட்டுமொத்த ஆட்கள் பற்றாக்குறையினால் மக்களுக்கு சீரான பஸ் சேவை கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

3 மாதங்களில் நிரப்ப முடிவு

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஆரம்பத்தில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை அதிகமாக இருந்தது உண்மைதான். ஆனால், போதிய ஆட்களை நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தான் 4,000 ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இப்படி படிப்படியாக அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களில் எஞ்சியுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x