Published : 28 Oct 2013 05:52 PM
Last Updated : 28 Oct 2013 05:52 PM

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கையைக் கண்டிக்க பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையை இந்திய அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில் "கடந்த 26-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த 6 அப்பாவி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 26-ம் தேதி 1.30 மணியளவில் தனுஷ்கோடி அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித முன்அறிவிப்பு இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், மீனவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். படகின் முகப்புப் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் பெரும் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, உயிரைப் பாதுகாப்பதற்காக அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் கண்மூடித்தனமான, மனிதாபிமானமற்ற இந்தத் தாக்குதலால், பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசு அவ்வப்போது உறுதி அளித்து வருகின்ற போதிலும், இலங்கை கடற்படையினரின் கொடுஞ்செயலால் அப்பாவி தமிழக மீனவர்களின் வாழ்க்கை அபாய கட்டத்தில் இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

நமது கடல் எல்லையையும், இந்திய குடிமக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோரக் காவல்படையும், இந்திய கப்பற்படையும் இலங்கை கடற்படையினரின் கொடுஞ்செயல்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

தமிழக அப்பாவி மீனவர்களை அச்சுறுத்துவதும், கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதும் போன்ற செயல்களில் இலங்கை கடற்படை நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 75 மீனவர்களும், 35 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலைமை மேலும் மோசமாகி, பல அப்பாவி தமிழக மீனவர்கள் இறப்பதற்கு முன்பு தாங்கள் இந்தப் பிரச்சினையை முக்கியப் பிரச்சினையாகக் கருதி அணுக வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக, இலங்கையில் உயர் மட்ட அளவில் தாங்கள் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்திற்காக இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தென்கடலோர மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளாக பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா இருந்து வருகிறது. எனவே, அந்தப்பகுதி மீனவர்களின் உயிர்களும், மீன்பிடி உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x