Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM

அடிக்கடி தீ விபத்தில் சிக்கும் சென்னை மாநகர பஸ்கள்

சென்னை மாநகர அரசு பஸ்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 3,257 பஸ்களில் தினந்தோறும் 53.04 லட்சம் பேர் பயணம் செய் கின்றனர். இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை யில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த 27டி மாநகர பஸ்ஸில் திடீரென தீப்பிடித்தது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். அந்த பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மணலியில் மாநகர பஸ் ஒன்று தீப்பிடித்தது. இன்ஜினில் ஏற் பட்டுள்ள பழுதுதான் இந்த விபத்துகளுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடபழனியிலும், ஆவடியிலும் மாநகர பஸ்கள் தீப்பிடித்தன. முறையான பராமரிப்புப் பணி களை மேற்கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம். கடந்த 10 ஆண்டு களாக தொழில்நுட்பப்பிரிவில் போதுமான ஆட்கள் நியமிக்கப்பட வில்லை என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகி கள் தெரிவிக்கின்றனர்.

அரசு போக்குவரத்து பணிமனை களில் பஸ்களை நாள்தோறும் பராமரிப்பது மட்டுமின்றி மாதத்துக்கு ஒருமுறை முழுமை யான சோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆள் பற்றாக் குறையால் இது நடப்பதில்லை.

இது தொடர்பாக போக்கு வரத்துக் கழகத்தின் சிஐடியு சங்க துணைத் தலைவர் எம்.சந்திரன் கூறுகையில், ‘‘தொழில்நுட்பப் பிரிவில் போதிய ஆட்கள் இல்லாததால், பஸ் ஓட்டுநர்கள் சொல்லும் பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுவது இல்லை. பஸ் இன்ஜினில் ஏற்படும் பழுது களால்தான் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இன்ஜினில் ஏற்படும் எண்ணெய் கசிவுதான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

எண்ணெய் கசிவு, பஸ் கண்ணாடி மற்றும் இருக்கைகள், கதவுகள், பிரேக் உள்ளிட்ட குறை களை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் விபத்து கள் ஏற்படாமல் இருக்கும்’’என்றார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.) பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘பராமரிப்புப் பணிகள் முழுமையாக நடப்பதில்லை இதனால்தான் மாநகர பஸ்கள் மட்டுமல்ல, மற்ற நகரங்களில் இயக்கப்படும் பஸ்களிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. மாதந்தோறும் 12 அரசு பஸ்கள் தீ விபத்தில் சிக்குகின்றன. புதிதாக வரும் பஸ்கள் ஒன்றரை ஆண்டுகளில் மிகவும் பழைய பஸ்களாக மாறிவிடுகின்றன. இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்து தொங்கு கின்றன. இதனால், மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்’’ என்றார்.

மாநகர பஸ்களில் அடிக்கடி நடக்கும் தீ விபத்து குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் மாநகர போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்க முயன்றபோது தொடர்புகொள்ள முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x