ராஜா: மக்களின் இசைக்கு வயது 71

ராஜா: மக்களின் இசைக்கு வயது 71
Updated on
3 min read

சமூகத்தில் அனைவருக்குமான பொது ஈர்ப்பு இளையராஜாவின் இசை!

இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ள முடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்பு வெள்ளைத் திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம்போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பதுபற்றியெல்லாம் தேடவோ முயலவோ அறிந்திருக்கவில்லை. 70-களில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத் திரைப்படத்தின் பெயர் 'அன்னக்கிளி' என்பதும், 'இளையராஜா' என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரியவந்தது.

மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி' திரைப்படப் பாடல்கள், பள்ளிக்கூடத்துப் பாடங்கள்போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆயின. திருமண வீடுகள், மஞ்சள் நீராட்டு மற்றும் கோயில் கொடைகளில் ‘அன்னக்கிளி' பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ‘லாலி லாலி லலோ' என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப் பாத்தீங்களா' பாடல் ஆரம்பிக்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடங்களிலும் இனம்புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே' பாடல் சொல்ல முடியாத சோகத்தையும், ‘சொந்தமில்லை பந்தமில்லை' கண்ணீரையும், ‘சுத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்' குதியாட்டமும் போட வைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா.

பொது ஈர்ப்பு

கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதன அறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரை அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த 35 ஆண்டுகளாக ஒவ்வொரு தமிழரும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவைத் தொடர்புபடுத்தியே வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கி அழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் 35 ஆண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய 71-வது வயதில் 1,000-வது படத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட அவரை, தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில், அனைத்துப் பிரிவினருக்குமான ஒரு பொது ஈர்ப்பு, இளையராஜா.

நாட்டுப்புற இசையிலிருந்து மேற்கத்திய இசை வரை

நாட்டுப்புற இசையைத் தமிழ்த் திரையிசைக்குள் கொண்டுவந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி, அவரது ஆளுமையைக் குறுக்கப் பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையைச் செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர். ‘மச்சானப் பாத்தீங்களா பாட்டுல வார கிதார் பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சுபோச்சுல்லா!' என்று பாளையங்கோட்டைக்காரரான பேஸ் கிதாரிஸ்ட் கிறிஸ்டோஃபர் சார்வாள் சொல்வார். நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவ கௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திர மத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், , பிலஹரி, சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்க வேண்டும் என்பார்கள். வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபேலா, டோலக், தவில் போன்ற தாள வாத்தியக் கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசை ஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும் ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்க முடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள்தான் என்றில்லை… பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் பால் மரியாட்டுக்குக் கூட இளையராஜாவின் இசை ஆச்சரியத்தை அளித்தது.

‘நான் இளையராஜாவின் ரசிகன்'

70-களில் தமிழகமெங்கும் ஆனந்த், பிரேம்நகர், யாதோங்கி பாரத், பாபி போன்ற இந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன. இந்தி அறியாத, வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ‘மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரே கயா' என்று பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு ‘16 வயதினிலே' திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே'க்குப் பிறகு 30 ஆண்டுகளாக இந்தித் திரையிசையில் என்ன நடக்கிற

தென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில், இந்தித் திரையிசை வல்லுநர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத் அலி, சலீல் சௌத்திரி, ஆர்.டி. பர்மன், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர். ‘செண்பகமே செண்பகமே' பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷா போன்ஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசை மேதை ஹரிபிரசாத் சௌரசியா தனது இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்

களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்றார். ‘ஹேராம்' திரைப்படத்தின் ‘இசையில் தொடங்குதம்மா' பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாட முடிகிறதோ, இல்லையோ, என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பிவருகிறேன்' என்றார், ஹிந்துஸ்தானி இசை வல்லுநர் அஜய் சக்ரவர்த்தி. அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரவர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே எம்.எஸ்.வி-யின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்' என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசை மன்னர்' எம்.எஸ். விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்' என்று மேடையிலேயே சொன்னார்.

தன்னுடைய இளமைப் பருவம் முழுக்கத் தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகல சாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டிவந்தார். ‘உதயகீதம்' திரைப்படத்தின் ‘தேனே தென்பாண்டி மீனே' பாடலைத் தொடர்ந்து ‘பூவே செம்பூவே', ‘தென்றல் வந்து என்னைத் தொடும்', உன் பார்வையில் ஓராயிரம்' என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்க விட்டு, கோடைப் பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.

‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?' என்று கேட்டேன்.

‘என்ன சார் இப்படிக் கேட்டுட்டிய! அம்மா, அப்பா,

தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து

கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான். தெனமும் சொரிமுத்தையனக் கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா' என்றார்.

இந்த ஆண்டு இளையராஜாவுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.

- சுகா, எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: kssuka@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in