Published : 15 Apr 2017 07:43 AM
Last Updated : 15 Apr 2017 07:43 AM
கோயம்பேடு சந்தையில் 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப் பட்டுள்ள நிலையில், மின் இணைப்பு வழங்கப்படாததால் அவை திறக்கப்படாமல் உள்ளன.
கோயம்பேடு சந்தை, மலர் சந்தை, காய்கறி சந்தை, பழச் சந்தை என 3 பிரிவுகளாக இயங்கி வருகின்றன. இந்த சந்தை வளாகத்தில் மொத்தம் 3,146 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைக்கு தினமும், தொழிலாளர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர் கள் என 1 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் யாருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. அதனால் இப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிவந்தனர்.
இந்நிலையில், கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலகம் சார்பில், ரூ.40 லட்சம் செலவில் ஒரு மணி நேரத்துக்கு தலா 2 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் திறன் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களை, 3 இடங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணி கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அவை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
இது தொடர்பாக அப்பகுதி வியாபாரிகள் கூறும்போது, “எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. இதனால் அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. அதனால் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள குடிநீர் மையங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகக் குழு அலுவலகத்தில் கேட்டபோது, “இந்த குடிநீர் மையங்களுக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளோம். இணைப்பு கிடைத்தவுடன், அந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வரும்” என்றனர்.
மின்வாரியத்தின் அண்ணா நகர் அலுவலகத்தில் கேட்ட போது, ‘‘சில தினங்களில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT