Published : 06 Sep 2016 11:13 AM
Last Updated : 06 Sep 2016 11:13 AM

தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விடுக: கர்நாடக அரசுக்கு வாசன் கோரிக்கை

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக அரசு ஆண்டுதோறும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு வரை 160 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கியது. மீதமுள்ள 32 டி.எம்.சி. தண்ணீரை தர மறுத்துவிட்டது. மேலும் இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை தர வேண்டிய சுமார் 94 டி.எம்.சி தண்ணீரையும் இதுவரை முழுமையாக வழங்காமல் இருப்பது கர்நாடக அரசின் நியாயமற்ற செயலாகும்.

கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கர்நாடக அரசின் வீண்பிடிவாதப் போக்கால் காவிரி நீரை நம்பியிருக்கின்ற சுமார் 5 லட்சம் தமிழக விவசாயக் குடும்பங்களின் விவசாயம் மூன்று போகத்திலிருந்து, இரண்டு போகமாக மாறி, ஒரு போக விளைச்சலுக்கும் காத்திருக்கின்ற சூழலே நிலவுகிறது.

காவிரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு எமாற்றமே மிஞ்சியதால் கடந்த 7 வருடங்களாக குறுவை சாகுபடி நடைபெறாமல் போன நிலையில் இனி சம்பா சாகுபடியும் நடைபெறுமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. மேலும் காவிரி நீரை குடிநீருக்காக நம்பியிருக்கின்ற பல இலட்சக்கணக்கான பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் - மனிதாபிமான அடிப்படையிலாவது கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்துக்கிறது.

மேலும் நேற்றைய தினம் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கர்நாடக அரசு வரும் 10 நாட்களுக்கு நாள் தோறும் 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எனவே கர்நாடக அரசு அம்மாநிலப் பிரச்சினைகளையும், அரசியல் உள்நோக்கத்தையும் உட்படுத்தாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்துக்கு கால அட்டவணைப்படி மாதம் தோறும் காவிரியிலிருந்து உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்'' வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x