Published : 10 Jan 2014 06:22 PM
Last Updated : 10 Jan 2014 06:22 PM

தமிழகத்தில் மாணவர்களை டியூஷனுக்கு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை

தமிழகத்தில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பணம் வசூலித்து டியூஷன் நடத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி, ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனி வகுப்புகள் (டியூஷன்) நடத்துவதாகவும், டியூஷனுக்கு வராத மாணவர்களிடம் வகுப்பில் கடுமையாக நடந்துகொள்வதாகவும் அரசின் கவனத்துக்கு தெரியவந்துள்ளது. ஆசிரியர்களின் இத்தகைய நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து டியூஷன் எடுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடரப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து டியூஷன் நடத்துவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் அறிவுரைகளை மீறி செயல்படும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு இதுபற்றி உடனடியாக ஆலோசனை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், மாவட்டக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x