

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 43 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதங்களில் 77 தமிழக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களை 10 தனித்தனி சிறைபிடிப்புகள் மூலம் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், வவுனியா, நீர் கொழும்பு சிறைகளில் அடைத்தனர்.
இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகளை அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து பருத்தித்துறை, ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் 43 தமிழக மீனவர்கள் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் படகுகளை நீதிமன்றங்கள் விடுவிக்கவில்லை.
மீதமுள்ள 34 மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார், கல்பிட்டி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.