Published : 01 Nov 2013 12:28 PM
Last Updated : 01 Nov 2013 12:28 PM

சென்னையில் அரசு அச்சகத்தில் தீ விபத்து: அச்சு இயந்திரங்கள் சேதம்

சென்னை மின்ட் பகுதியில் உள்ள அரசு அச்சகத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காகித கட்டுகள் நிறைய இருந்ததால், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்ததும், வட சென்னையில் இருந்து சம்பவ இடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் அரசு நூல்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

10 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த அச்சகம் 180 ஆண்டுகள் பழைமையானது. கடந்த 1831–ம் ஆண்டு இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இங்குதான் அச்சடிக்கப்படுகிறது.

கட்டடத்தின் 3 தூண்கள் முற்றிலுமாக சரித்து விழுந்துள்ளது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், தீயை கட்டுப்படுத்த அதிக வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதாலும் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. எனவே, எந்த நேரம் வேண்டுமானாலும் கட்டடம் முழுமையாக இடிந்து விழ வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x