Published : 10 Jan 2014 09:30 AM
Last Updated : 10 Jan 2014 09:30 AM

‘தமிழக ஆம் ஆத்மியில் பிளவு இல்லை’

ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பிரிவில் பிளவு இல்லை என்று அக்கட்சியின் தேசிய அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரு குழுக்களாகப் பிரிந்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். அதில் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரிவு அறிவித்தது.

இதையடுத்து ஆம் ஆத்மியின் தமிழக பிரிவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தா “தி இந்து”விடம் வியாழக்கிழமை கூறுகையில், “தமிழகத்தில் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, கட்சியின் தேசிய அமைப்பின் ஒப்புதலின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

“ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவில் பிளவு இல்லை. தமிழகத்தில் கிறிஸ்டினா சமி தான் கட்சியின் மாநில அமைப்பாளர். வேறு யாரும் கட்சி நிர்வாகிகளாக அமர்த்தப்படவில்லை. இவர் தமிழகத்தில் சிலரை கட்சியிலிருந்து நீக்கியது சரியே. தலைமையை பற்றி அவர்கள் தவறான பிரச்சாரம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் பங்கஜ் குப்தா.

கட்சியின் தமிழக நிர்வாகத்தை கண்காணிக்கும் மற்றொரு தேசிய நிர்வாக குழு உறுப்பினரான அமித் ஜாவும், சிலர் நீக்கப்பட்ட நடவடிக்கையை உறுதி செய்தார். ஆனால் நடவடிக்கைக்கு முன் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

“தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி மாநாட்டில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்துகொள்வது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார் அமித் ஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x