Published : 22 Jan 2017 11:16 AM
Last Updated : 22 Jan 2017 11:16 AM
ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களின் பயிற்சி யாளர்கள் மற்றும் சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரூ.78 லட்சத்து 50 ஆயிரம் ஊக்கத் தொகையை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலக அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறும் தமிழக வீரர்கள், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2014-ல் தென்கொரியாவில் நடைபெற்ற 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களின் பயிற்றுநர்களான சங்கர்பாசுவுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம், சைரஸ் போன்ச்சாவுக்கு ரூ.24 லட்சம், டி.ராமச்சந்திரனுக்கு ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.34 லட்சத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
அதேபோல், 2012-ல் நடை பெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் வென்ற எம்.ஆர்.வெங்கடேஷூக்கு ரூ.5 லட்சம், 2013-ல் வென்ற வி.ஏ.வி.ராஜேஷூக்கு ரூ.3 லட்சம், 2015-ல் வென்ற அரவிந்த் சிதம்பரத்துக்கு ரூ.5 லட்சம், 2015-ம் ஆண்டுக்கான மகளிர் பிரிவு பட்டத்தை வென்ற பி.மிச்செல் காத்தெரினா, எம்.மகாலட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.19 லட்சத்தை முதல்வர் வழங்கினார்.
சாந்த முத்துவேல்
அதனைத் தொடர்ந்து, 2014-ல் தென் கொரியாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வட்டெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கே.சாந்த முத்துவேலுக்கு ரூ.15 லட்சம், ஜூடோ பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆர்.விஜயசாந்திக்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சத்தை முதல்வர் வழங்கினார். ஆக மொத்தம் ரூ.78 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
அப்போது, சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT