கோவையில் கலவரத்தில் ஈடுபட்ட 350 பேர் கைது: போலீஸ் கொடி அணிவகுப்பு - அமைதி திரும்புகிறது

கோவையில் கலவரத்தில் ஈடுபட்ட 350 பேர் கைது: போலீஸ் கொடி அணிவகுப்பு -  அமைதி திரும்புகிறது
Updated on
1 min read

இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதால், கோவையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டு, கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22-ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், கோவையில் நேற்று முன்தினம் வன்முறை ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட கடைகள், 60-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், கார்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஒரு போலீஸ் ஜீப், 2 கடைகள் தீவைக்கப்பட்டன. 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. வெளிமாவட்ட போலீஸார் 2,355 பேர் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 108 பேரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 270 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50% கடைகள் திறப்பு

நேற்று மதியம் வரை கோவை மாநகரில் 50 சதவீத கடைகள் திறந்திருந்தன. படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. காந்திபுரம், உக்கடம் பகுதிகளில் பதற்றத்தைத் தணிக்க தலா 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறும்போது, “வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களை ஆங்காங்கு உள்ள சிசிடிவி கேமராக்கள், வீடியோ கேமராக்கள், புகைப்படங்களின் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

கொலையாளிகளை கண்டுபிடிக்க சேலம் சரக டிஐஜி நாகராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொலை செய்யப்பட்ட சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரம் பேர் வரலாம் எதிர்பார்த்தோம். அதற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால் அதில் வன்முறைக் கும்பலும் ஊடுருவிவிட்டது. அதுதான் இத்தனை வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in