Published : 31 Dec 2013 12:23 PM
Last Updated : 31 Dec 2013 12:23 PM

256 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 256 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

கடந்த டிசம்பர்12-ம் தேதி 15 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 111 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது. கடந்த 28-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் 6 படகுகளில் மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டனர்.

மறுநாள் இரவு 3 கட்டு மரங்களில் சென்று மீன் பிடித்த பாம்பன் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படை 6 முறை நடுக்கடலில் அத்துமீறலில் ஈடுபட்டு தமிழக மீனவர்களை கடத்திச் சென்று சிறைபிடித்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் அத்துமீறல்கள் தமிழக மீனவ சமுதாய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஜலசந்தியில் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதார உரிமை உள்ளது. அதை இலங்கை மீண்டும் மீண்டும் சட்ட விரோதமான முறையில் தடுத்து வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை, தவறான அறிவுரையால் இலங்கைக்கு விட்டுக்கொடுத்து செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு கடுமையாக நடந்துகொள்ளாததால்தான் தமிழக அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கொடூர தாக்குதல் நடத்துகின்றனர். இந்த திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உறுதியான முடிவுகட்ட வேண்டும்.

இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசவேண்டும் என்று தமிழக மீனவ அமைப்புகள் விரும்புகின்றன. அவர்களது உணர்வை ஏற்று தமிழக அரசு கடந்த டிசம்பர் 23-ம் தேதி எழுதிய கடிதத்தில் தமிழக - இலங்கை மீனவர்களிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் வரும் ஜனவரி 20-ம் தேதி நடத்த பரிந்துரை செய்திருந்தது.

மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டதாக பத்திரிகை களில் செய்தி வெளியானது. என்றாலும் இந்திய அரசிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான உறுதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசு உடனே இதில் தலையிட்டு, உறுதியான நடவடிக்கை எடுத்து, பல மாதங்களாக வாடிக்கொண்டி ருக்கும் 216 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும்.

கடந்த 28, 29 தேதிகளில் கடத்தப்பட்ட 40 மீனவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள 256 தமிழக மீனவர்களையும் விடுவிக்க தாங்கள் தலையிட்டு தூதரக அளவில் தொடர்பு கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் 81 மீன் பிடி படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x