Published : 10 Jun 2016 11:53 AM
Last Updated : 10 Jun 2016 11:53 AM

சிவகங்கை: மின் விபத்தில் கைகளை இழந்த மாற்றுத்திறனாளிக்கு கடன் வழங்க அலைக்கழிக்கும் வங்கிகள்

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் மின் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாற்றுத் திறனாளி, தனது கணினி மையத்தை விரிவுபடுத்துவதற்காக அரசு வங்கிகளில் கடன் கேட்டு பல மாதங்களாகியும் அலைக்கழிப்பதால், தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு பணம் பெற்று தொழில் செய்து வருகிறார். காஞ்சிரங்கால் இலுப்பகுடியைச் சேர்ந்த கண்ணையா, வள்ளி ஆகியோரது மூத்த மகன் க.சரவணன்(27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர், கடந்த 2008-ல் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கு டிவி ஆண்டெனா பொருத்தச் சென்றார்.

அப்போது அருகே இருந்த மின்கம்பி மீது அவரது இரு கைகளும் பட்டன. இதில் அவரது கைகள் கருகின. தனியார் மருத்துவமனையில் முழங்கைக்கு கீழ் கைகள் துண்டிக்கப்பட்டன. இருப்பினும் மாற்றுத் திறனாளி சரவணன் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் கணினி மையம் நடத்தி வருகிறார்.

இது குறித்து க.சரவணன், `தி இந்து’விடம் கூறியதாவது:

மின்விபத்தில் எனது இரு கைகளையும் இழந்தேன். அரை குறையாக கைகள் இருந்தாலும் அதையும் வைத்து முன்னேற வேண்டும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். லேப்டாப் மூலம் சுயமாக கணினி, இணையதளம் கற்றேன். பின்பு கணினி மையத்தில் பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றேன்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் அனைத்து நுணுக்கங்களையும் கற்றேன். கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக ஜெராக்ஸ், இணையதள மையம் நடத்தி வருகிறேன். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தல், பான் கார்டு எடுத்துக் கொடுத்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறேன். மருத்துவச் செலவுக்காக என் பெற்றோர் வாங்கிய ரூ.5 லட்சம் கடனை அடைத்து வருகிறேன்.

கடந்த 5 ஆண்டாக சில அரசு வங்கிகளிலும் வரவு, செலவு செய்து வருகிறேன். தற்போது கடையை விரிவுபடுத்தி பென்டிரைவ், கீபோர்டு, மௌஸ் என கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யலாம் என முடிவெடுத்து அரசு வங்கிகளை அணுகினேன். வங்கி நிர்வாகத்தினர், என்னை நம்பி கடன் தர மறுக்கின்றனர். பல ஆண்டாக அலைந்தும் எந்தப் பயனும் இல்லை.

ஆட்சியர் அலுவலகத்திலும் வேலை வாய்ப்பு கேட்டும், சுயதொழில் செய்வதற்கு கடனுதவி பெற்றுத்தருமாறும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சில தனியாரிடம் ரூ.40 ஆயிரத்தை கூடுதல் வட்டிக்கு வாங்கி தொழில் செய்து வருகிறேன். தினமும் குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்தி வருகிறேன். என்னை நம்பி மனைவி, மகள் உள்ளனர்.

அரசு வங்கிகள் பணம் தந்தால் கடையை விரிவாக்கம் செய்து என்னைப் போன்ற மாற்றுத் திறனாளி ஒரு வருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் முடிவெடுத்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x