பணி நியமனம்: அரசு கல்லூரி செவிலியர்களின் சீராய்வு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பணி நியமனம்: அரசு கல்லூரி செவிலியர்களின் சீராய்வு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்வது தொடர்பாக அரசு கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த பி.கருப்பசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

அரசுக்கல்லூரிகளில் பயின்ற 1861 செவிலியர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டில் பிப்ரவரி 23, மற்றும் ஏப்ரல் 22 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.அவர்களில் பிப்ரவரி 23ல் கலந்துகொண்ட 969 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஏப்ரல் 22ம் தேதி பங்கேற்ற 892 பேருக்கு பணிநியமன ஆணைகள் தயாராக இருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வந்ததால் நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த சூழலில் 2012 ஜனவரி 18 அன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

அதில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு மருத்துவபணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களோடு தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணை தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பாகவே நாங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் பங்கேற்று விட்டதால் எங்களுக்கு அந்த அரசாணை பொருந்தாது. ஆகவே தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்திய நாராயணன் ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து விட்ட காரணத்தாலேயே தனக்கு வேலை வழங்க வேண்டும் என யாரும் உரிமை கோர முடியாது என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆகவே மனுதாரரின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in