Published : 21 Jan 2017 11:16 AM
Last Updated : 21 Jan 2017 11:16 AM

அலங்காநல்லூரில் தொடரும் பாசப் போராட்டம்: 10 கி.மீ. நடை பயணமாக வந்த சிறுவர்கள்

மதுரை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் 10 கி.மீ. தொலைவில் இருந்தும் சிறுவர்கள், அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக வந்தது போராட்டக்காரர்களிடம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியது.

அலங்காநல்லூர் மக்களின் போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிப்பதாகவும், ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்வதாகக் கூறியும், கிராம மக்களும், போராட்டக்காரர்களும் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.

அலங்காநல்லூரில் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த இந்தப் போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகியது. பீட்டாவால் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட தடை தற்போது பிறந்த குழந்தையைக்கூட போராட்டக் களத்துக்கு வர வைத்துள்ளது. நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சித்திரைத் திருவிழாவுக்கு செல்வதுபோல் அலங்காநல்லூரில் குடும்பம் குடும்பமாக திரள்கின்றனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தால் அதிகபட்சம் 2 ஆயிரம் பேர் மட்டுமே திரள்வார்கள். ஆனால், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகளை நிரந்தரமாக எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் திறந்துவிட வேண்டும் என்ற ஒற்றை குரலே மெரீனாவில் இருந்து கன்னியாகுமரி வரை ஒலிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் இந்த பாசப் போராட்டத்தால் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பதினெட்டுபட்டி கிராம மக்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். நேற்று பிற்பகல் 12 மணியளவில் ஊமச்சிக்குளம் பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்கு சிறுவர்கள் நடைபயணமாக வந்து அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கேற்றது அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம், கோவை, ராஜபாளையம், சாத்தூர், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள், தம்பதிகளும், அலங்காநல்லூர் போராட்டத்துக்கு வந்திருந்தனர். இவர்களில் பலர் 4 நாள், 3 நாள் அங்கேயே தங்கி இரவில் சாலையிலேயே தூங்கி, காலையில் அருகில் உள்ள வீடுகளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

ஆட்சியரிடம் சிறுமி உருக்கம்

ஆட்சியர் கொ. வீரராகவராவ் நேற்று அலங்காநல்லூர் வாடி வாசலை பார்வையிட வந்தார். அவரிடம் 9 வயது சிறுமி ஜல்லிக்கட்டு நடத்த விடுங்க சார், ’’ என்றார். அதற்கு ஆட்சியர், கண்டிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும்மா என தட்டிக் கொடுத்து சென்றார். அதுபோல், அந்த வழியாக மாட்டுக்கு புல் வெட்டிக் கொண்டு சைக்கிளில் வந்த விவசாயி பொன்னையா, ஒவ்வொரு வருஷமும் ஏமாத்துறாங்க. இந்த வருஷமும் ஏமாத்திட்டாங்க, ஏதாவது ஏற்பாடு செய்யுங்கய்யா, என்றார்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும் போது, ‘‘தமிழக மக்கள் உணர்வுக்கு மாநில அரசு மதிப்பு அளித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால், அதற்கான அரசு சார்பு ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது. தமிழக அரசு உத்தரவிட்டதும், எந்நேரமும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். போராட்டங்கள் அமைதியாக நடப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x