Published : 19 Jul 2016 09:03 AM
Last Updated : 19 Jul 2016 09:03 AM

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 1,120 விரிவுரையாளர்கள் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக தேர்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரைவில் 1,120 விரிவுரை யாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக் னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணியில் சேர முன்பு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. ஆனால், பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டுப்பாடு விதித்து 139 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு விதிக்கப்படாத நிலையில் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு மட்டும் வயது வரம்பு கொண்டு வரப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப் பட்டது. முன்பு இருந்து வந்ததைப் போலவே 57 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக் கலாம் என்று அறிவித்தது. அதோடு வயது வரம்பு கட்டுப் பாட்டுடன் வெளியிடப்பட்ட 139 உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வாபஸ் பெற்றுக் கொண்டது. வயது வரம்பு தளர்த்தப்பட்டதால், ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் போக, புதியவர்கள் விண்ணப்பிக்கவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டாக வேண்டும். இதற்கிடையே, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 504 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பொறியியல் கல்லூரி உதவி பொறியாளர் தேர்வு தொடர்பான பழைய அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த பதவியிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரை யாளர் பணியிடங்களிலும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான காலியிடங்கள் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில், 192 உதவி பேராசிரியர்களையும், 1,120 விரிவுரையாளர்களையும் தேர்வு செய்து தருமாறு காலியிடங் களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒப்படைத்துள்ளது. எனவே, உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணி போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்இ அல்லது எம்டெக் முடித்திருக்க வேண்டும். இளங்கலை அல்லது முதுகலையில் முதல் வகுப்பு அவசியம். பொறியியல் அல்லாத பாடங்களாக (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்) இருந்தால் சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் யுஜிசி (தற்போது சிபிஎஸ்இ) அல்லது சிஎஸ்ஐஆர் “நெட்” தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதேபோல், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு முதல் வகுப்புடன் பிஇ அல்லது பிடெக் பட்டம் போதும். பொறியியல் அல்லாத பாடங்களாக இருப் பின் முதல் வகுப்புடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு மாற்றமா?

அண்மையில் அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக இருந்த கலை அறிவியல் பாட பேராசிரியர்கள் அரசு கலைக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், உபரியாக உள்ள பொறியியல் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் 140 பேரை அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்றக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகம் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை தொழில்நுட்பக் கல்வித்துறை தீவிரமாக ஆய்வுசெய்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்று பேராசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் தங்களது பணிமூப்புக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்று அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x