Published : 31 Dec 2013 12:55 PM
Last Updated : 31 Dec 2013 12:55 PM

ராமேஸ்வரம் நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ராமேஸ்வரம் சங்குமால் நாட்டுப்படகு துறைமுகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 18 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிறைபிடித்தனர். அவர்களிடமிருந்து வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் 3 நாட்டுப் படகுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களைகாங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கடற்படை முகாமில் விசாரணைக்குப் பிறகு பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 18 ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தப் பட்டனர்.

மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி ஜனவரி 10 தேதி வரையிலும் காவலில் வைக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து பாம்பன் மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக நாட்டுப் படகு மீனவர்களின் பிரதிநிதிகள் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 18 பேர்களை வர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடற்கரைகளில் நாட்டுப் படகு மீனவர்கள் தங்களின் படகுகளில் கறுப்புக் கொடிகளை கட்டி ஆழம் குறைந்த பகுதிகளில் தங்களின் படகுகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x