Published : 22 Jun 2016 07:53 AM
Last Updated : 22 Jun 2016 07:53 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 பேர் எம்எம்சி-யை தேர்வு செய்தனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2,853 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,055 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 3,908 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 25,379 மாணவ, மாணவிகள் போட்டியிடுகின்ற னர்.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2016-17-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாள் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 69 மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். அவர்களுக்கு எம்எம்சி-யில் சேருவதற்கான சேர்க்கை கடிதத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) ஆர்.விமலா, மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “முதல்வரின் தீவிர முயற்சியால் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பொதுப் பிரிவு முதல் நாள் கலந்தாய்வுக்கு கட்-ஆப் 200 முதல் 198 மதிப்பெண்கள் வரையுள்ள 737 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 732 பேர் கலந்தாய்வுக்கு வந்தனர்; 5 பேர் வரவில்லை; ஒரு மாணவர் நிராகரிக்கப்பட்டார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க 727 மாணவர் களுக்கும், கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க 4 மாணவர்களுக்கும் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

முதல் நாள் கலந்தாய்வு முடிவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,058 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,054 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இன்று நடைபெறும் 2-ம் நாள் கலந்தாய்வுக்கு கட்-ஆப் 197.75 முதல் 197 மதிப்பெண்கள் வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x