Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தென் தமிழகத்தில் ஓரிரு நாளில் மழை- வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் சற்று தணியக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமை உருவாகியுள்ளது.

இது மேலும் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு நகர்ந்தால் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெரியவரும் என்று கூறப் படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

தென் தமிழகத்தில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யலாம். வட தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும்.

வெப்பநிலை அதிகம் இருந்தால் மேகங்கள் திரண்டு மேலெழும்பிச் செல்வதற்கான சக்தியை கொடுக்கும். தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை அதிகம் உள்ளதால், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை கண்டிப்பாக பெய்யும். இவ்வாறு ரமணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x