Published : 07 Jan 2014 04:01 PM
Last Updated : 07 Jan 2014 04:01 PM

எட்டாவது முறையாக 32 தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களின் காவலை, எட்டாவது முறையாக நீட்டித்து திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதி காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அன்பழகன், ஆனந்தவேலு, செல்லத்துரை மற்றும் பொன்னுச்சாமி ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் 32 மீனவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதி நீர்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். மீனவர்களின் 4 படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் திரிகோணமலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

32 மீனவர்களின் காவல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்ததை அடுத்து திரிகோணமலை நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி அவர்களின் காவலை ஜனவரி 20-ம் தேதி வரை எட்டாவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்தது 32 மீனவர்களும் மீண்டும் திரிகோணமலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x