Last Updated : 17 Mar, 2017 02:43 PM

 

Published : 17 Mar 2017 02:43 PM
Last Updated : 17 Mar 2017 02:43 PM

பணிப்பெண் கடத்தல் வழக்கில் சசிகலா புஷ்பாவை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு

தனக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், தாயார் ஆகியோரை ஏப். 20-ம் தேதி வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கௌரி ஆகியோர் மீது அவரது வீட்டில் பணிபுரிந்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை போலீஸார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு சட்ட உதவி அளித்து வந்த திசையன்விளை வழக்கறிஞர் சுகந்தியின் வீட்டின் மீது செப். 11-ல் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாபுஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் மீது திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர்கள் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு எதிராக தூத்துக்குடி புதுக்கோட்டை, திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்ப பெறுவதாக பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

பின்னர் புகாரை திரும்ப பெறுமாறு சசிகலாபுஷ்பா உள்ளிட்டோர் மிரட்டியதாக டிஜிபி அலுவலகத்தில் பானுமதி புகார் அளித்தார். இவரது புகாரின் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்ககேஸ்வர திலகன், தாயார் கெளரி ஆகியோர் மீது திசையன்விளை போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மூவரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜெ.நிஷாபானு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மூவருக்கும் முன்ஜாமீன் வழங்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணைக்குப்பின் சசிகலாபுஷ்பா உள்ளிட்ட மூவரையும் ஏப். 20-ம்தேதி வரை கைது செய்த தடை விதித்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x