ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
Updated on
1 min read

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து எறிந்து சேதப்படுத்தினர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கள் கிழமை இரவு 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே 50-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிய ரக கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அந்தப் பகுதிகளில் ரோந்து வந்தனர்.

அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்து ராமேஸ்வரம் மீனவர்களிடம், இது இலங்கை கடற்பகுதி இங்கு மீன் பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததுடன், 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். மேலும் கற்களையும் சோடா பாட்டில்களையும் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலினால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசரமாக கரை திரும்பினர்.

மேலும் சிலர் வழக்கத்துக்கு மாறான இடங்களில் வலை விரித்து போதிய மீன்பாடு இல்லாமல் வெறும் கையுடன் கரை திரும்பினர். இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in