

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விஜயதரணி எம்எல்ஏ-வுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சந்தைத் திடலில் 2015 செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விஜயதரணி எம்எல்ஏ ஆகியோர் மீது அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஞானசேகரன், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விஜயதரணி எம்எல்ஏ மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கில் ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விஜயதரணி சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. விஜயதரணியின் உதவியாளர் ராஜகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றத்துக்கு அவர் வர முடியாத காரணத்தை குறிப்பிட்டு மனுவாக தாக்கல் செய்தார்.
இதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்தார். ‘வழக்கில் தொடர்புடைய நபர்தான் ஆஜராக வேண்டும். அவர் வரமுடியாவிட்டால் வழக்கறிஞர்கள் ஆஜராகலாம். உதவியாளர் ஆஜராவதை ஏற்கமுடியாது’ என்றார்.
இதைத் தொடர்ந்து விஜயதரணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, தலைமை குற்றவியல் நீதிபதி சதிகுமார் உத்தரவிட்டார். இவ்வழக்கு ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.