சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அதிமுக ஆதரவு கட்சிகள் ஆளுநரிடம் மனு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறி, ஆளுநர் ரோசய்யாவிடம் அதிமுக ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் நேற்று மனு அளித்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஆளுநர் ரோசய்யாவை இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில் இந்திய தேசிய லீக், புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம், இந்திய தேசிய முஸ்லிம் லீக், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கிறிஸ்டியன் கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிமுக ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ராஜ்பவனில் சந்தித்தனர்.
அப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுவதாகவும் கூறி, மனு ஒன்றை அளித்தனர்.
