

சென்னை கோபாலபுரம் நேஷனல் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவர் அத்வே ரமேஷ்(14). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒரு நவீன கருவியை (Fishermen Lifeline Terminal-FELT) உருவாக்கி உள்ளார். இது ஒரு கையடக்க சாதனம் ஆகும். இதன் மூலம் கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மீனவர்கள் பாதுகாப்புக்காக அத்வே ரமேஷ் கண்டுபிடித்துள்ள நவீன கருவிக்காக கூகுள் சமுதாய விருது (Google Community Impact Award) கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சமூக நோக்கிலான சிறந்தத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் சமுதாய விருது வழங்கப்படுகிறது.
மேலும், கூகுள் நிறுவனத்தின் 50 ஆயிரம் டாலர் கல்வி உதவித் தொகை பெறுவதற் கான போட்டிக்கு தேர்வுசெய்யப் பட்டுள்ள 20 பேரில் ஒருவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் விருது கிடைத்திருப்பது குறித்து ரமேஷ் கூறும்போது, “கூகுள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம் ஆகும். நான் இன்னும் நிறைய அறிந்துகொள்வதற்கும் எனது சிந்தனைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த விருது பெரிதும் உதவும். மீன் பிடிப்பதற்காகக் கடலில் எத்தனையோ நாட்கள் தங்கி கஷ்டப்படுகிறார்கள். சில நேரங்க ளில் எல்லையை தாண்டிவிட்ட தாகக் கூறி இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். கடலில் மீன் பிடிக்கும்போது அவர்களின் இருப்பிடம் குறித்தத் தகவல்கள் எதிர்பாராத சூழல்களை கையாள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வரப்பெற்ற பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களில் சிறந்த 100 திட்டங்களை கூகுள் தேர்வு செய்திருந்தது. அதில் ரமேஷின் கண்டுபிடிப்பு உள்பட 14 திட்டங்கள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.