Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

என் மகனும் விடுதலையாவான்- பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நம்பிக்கை

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதுபோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனும் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு 2000ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு சமர்பிக்கப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் அதனை நிராகரித்தார். இந்த வழக்கு வரும் 29-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் 15 பேருக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் பொருந்துவதால் பேரறிவாளன் விடுதலை ஆகிவிடுவார் என தான் நம்புவதாக அவரது தாய் அற்புதம்மாள் கூறுகிறார். சென்னைப் புத்தகக் காட்சியில் மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்களையும் படங்களையும் கொண்ட கடையை அமைத்திருக்கும் அவர் மேலும் கூறியதாவது:

தூக்கு தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், அது நீதிபதிகளின் மன நிலையையும், காவல் துறையினர் வழக்கை பதிவு செய்யும் பிரிவுகளையும் பொருத்தே கொடுக்கப்படுகிறது. பேரறிவாளனுடன் கைது செய்யப்பட்ட 19 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் 4 பேரை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனவே எனது மகன் வரும் 29-ம் தேதி விடுதலை அடைவான் என்று நம்புகிறேன். ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x