Published : 21 Mar 2014 09:50 AM
Last Updated : 21 Mar 2014 09:50 AM

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கைச் சிறையில் உள்ள 74 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து என்னுடைய தொடர் முயற்சியின் காரணமாக தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் இலங்கை நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது.

தமிழக அரசு சார்பில் 39 இலங்கை மீனவர்களும் அவர்களின் 18 படகுகளும் விடுவிக்கப்பட்டன. சென்னை பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக கொழும்பில் மார்ச் 25-ம் தேதி இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 19-ம் தேதி 74 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அவர்களின் 18 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது தமிழக மீனவர் சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு 74 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால் மட்டுமே கொழும்பில் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x