Last Updated : 25 Oct, 2013 08:21 PM

 

Published : 25 Oct 2013 08:21 PM
Last Updated : 25 Oct 2013 08:21 PM

இலங்கை மீனவர் 31 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

இந்திய எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 31 பேருக்கு நவம்பர் 8 ஆம் தேதி வரையிலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 9 அன்று கன்னியாகுமரி அருகே இந்திய எல்லை பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை சுற்றிவளைத்த இந்திய கடலோர காவற்படை இலங்கை மீனவர்கள் 26பேரை கைது செய்து அவர்களின் 4 விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட இலங்கை சிலாபம் மற்றும் வென்னப்புவ பகுதியை சேர்ந்த 26 மீனவர்களையும் தூத்துக்குடி தெர்மல் நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். பின்னர் அக்டோபர் 11 அன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விசாரித்த ராமநாதபுரம் குற்றயியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டி.தர்மன், மீனவர்களை அக்டோபர் 25ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து இலங்கை மீனவர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

அதே போல் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த அந்தோணி, அந்தோணி நியுமேன், இமானுவேல், குமார்வாஸ்,ஜேசுதாஸ் லியோன் ஆகிய 5 மீனவர்களும் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியக் கடற்படை எல்லை தாண்டி கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 31 மீனவர்களின் காவல் வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததையடுத்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் மீனவர்களை விசாரித்த நீதிபதி தர்மன் மீனவர்களின் காவலை மீண்டும் நவம்பர் 8 வரை நீட்டித்து உத்திரவிட்டார்.

நவம்பர் 8ம் தேதி இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x