Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது: முருகனின் தாய் பேட்டி

நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என முருகனின் தாய் சோமணி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக் கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை வாசலில் தமிழ் உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதற்கிடையில், நளினியின் தாய் பத்மா, முருகனின் தாய் சோமணி ஆகியோர் மத்திய சிறைக்கு வந்தனர். முதலில் முருகனை சந்தித்த இருவரும் பின்னர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியை சந்தித்துப் பேசினர். முன்னதாக நிருபர்களிடம் பத்மா கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அய்யா அவர்களுக்கு எங்கள் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நன்றி தெரிவிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

பின்னர், முருகனின் தாய் சோமணி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ நாங்கள் கும்பிட்ட கடவுள் கைவிடவில்லை. எங்களுக்காக போராடிய பொதுஜனங்கள், சொந்தங்கள், நீதிபதி சதாசிவம் அய்யா, வழக்கறிஞர்கள், ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். செய்யாத குற்றத்துக்காக குற்றவாளிகளாக்கினார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து லண்டனில் டாக்டருக்கு படிக்கும் முருகனின் மகள் ஹரித்ராவுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் இந்தியா வர விசா வழங்க மறுக்கப்படுகிறது ’’என்றார்.

மூவரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், சாந்தன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். சாய்பாபா பக்தராக மாறிவிட்டார். மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவு வந்த நேரத்தில்கூட மனம் தளராமல் இருந்தார். எங்களது தூக்குத் தண்டனை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்படும் என்றார். அவர் கூறியபடியே நடந்தது. இந்த வழக்கு ஆரம்பித்தபோதும் சாதகமாக முடியும் என்றார். அவரைப் பொறுத்தவரை எதிர்பார்த்த ஒன்றுதான்.

22 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பேரறிவாளன் பார்க்கிறார். தனது தாய் வயதான காலத்தில் யார் யாரையோ சந்தித்து முறையிட்டு வந்தார். அதற்கு பலன் கிடைத்துள்ளது. ரத்த சொந்தங்களை மட்டும் பார்க்க பேரறிவாளன் விருப்பம் தெரிவித்துள்ளார். வேறு யாரையும் இப்போது சந்திக்க விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x