

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கான பணிகளில் துணிந்து ஈடுபடுவோம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் அழகிரி பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜனவரி 30-ம் தேதியன்று அவரது ஆதரவாளர்கள் தோரணங்கள், போஸ்டர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் என்று நகரையே திக்குமுக்காட வைப்பது வழக்கம். அதேபோல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கும்.
இந்தச் சூழலில் அழகிரியை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவரது பிறந்த நாள் விழா நடைபெறுமா? என்று கேட்டதற்கு, அவரது ஆதரவாளரும், சமீபத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுள் ஒருவருமான பி.எம்.மன்னன் கூறியது:
"அண்ணன் பிறந்த நாளையொட்டி, இந்த ஆண்டு 63 கிலோ பிறந்த நாள் கேக் வெட்டப்படும். கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்ததால், எப்படி இதை எல்லாம் முன்னின்று நடத்துவது என்று பயந்து கொண்டிருந்தேன். இனிமேல் அந்தக் கவலையில்லை. அண்ணனும் நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பதால், துணிந்து வேலையில் இறங்குவேன்" என்றார் மன்னர்.