Last Updated : 16 Jan, 2017 11:50 AM

 

Published : 16 Jan 2017 11:50 AM
Last Updated : 16 Jan 2017 11:50 AM

தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக ரயில் மோதி பலியாவோர் எண்ணிக்கை திருவள்ளூர் பகுதியில் குறைகிறது: விதிகளை பின்பற்ற போலீஸார் அறிவுறுத்தல்

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், கணிசமான ரயில் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்த ரயில் நிலையப் பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்கள், விபத்துகள் உள்ளிட்டவைகள் தொடர்பான வழக்குகளை சென்னை- பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில்வே காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

பெரும்பாலும் ரயில் மோதி நடக்கும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளே அதிகம் பதிவு செய்யப்படும். தண்டாவளத்தை கடப்பது தவறு என தெரிந்தும் கவனமில்லாமல் கடப்பது, தவறி விழுவது, சிக்னல்கள் மற்றும் ரயில்வே கேட்டுகளை மீறிச் செல்வது போன்ற செயல்களால்தான் அதிக அளவு உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.

இந்நிலையில், திருவள்ளூர் ரயில்வே காவல்நிலைய போலீஸாரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் அவர்களது கட்டுப்பாட்டில் வரும் எல்லைக்குள் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், நெமிலிச்சேரி ரயில் நிலையம் முதல், கடம்பத்தூர் ரயில் நிலையம் வரை உள்ள 26 கிமீ தூரத்துக்குள் வரும் ரயில்வே பகுதிகள், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் அடங்கியுள்ளன.

இந்த எல்லைகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை, ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து வந்தது.

அந்த உயிழப்புகளில் கணிசமானவை, செல்போனில் பேசிக்கொண்டு கவனக் குறைவோடு தண்டவாளத்தைக் கடப்பது, ரயில் படிக்கட்டுகளில் பயணிப்பது உள்ளிட்டவைகளால் ஏற்பட்டவையாகும்.

ஆகவே திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில், ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளோம்.

இதனால், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2014-ல் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக இருந்தது 2015-ல் 62 ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 44 என்ற அளவில் உள்ளது. நடப்பாண்டில் இந்த உயிரிழப்புகள் கூட இருக்காது என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x