Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

இலங்கையிலிருந்து படகுகளுடன் 111 நாகை மீனவர்கள் திரும்பினர்

பறிமுதல் செய்த படகுகளை இலங்கை விடுவித்ததையடுத்து, நாகப்பட்டினம் மீனவர்கள் அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை ஊருக்குப் புறப்பட்டனர்.

கடந்த மாதம் 11-ம் தேதி கடலில் மீன் பிடித்த நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம் பகுதி மீனவர்கள் 111 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்களது 15 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ஜன. 14ம் தேதி மீனவர்களை மட்டும் விடுவித்த இலங்கை அரசு, படகுகளை விடுவிக்க மறுத்து விட்டது. சிறையிலிருந்து ஜன. 17-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளைத் திரும்பப் பெறாமல் ஊருக்குப் போக மாட்டோம் என்று கூறி இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.

இதனிடையே, நாகை ஆட்சியரகத்தில் ஜன. 18-ம் தேதி மீனவர்கள் சிலர் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள படகுகளை மீட்டுத் தரக் கோரி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை ஆட்சியர் முனுசாமியும், அமைச்சர் ஜெயபாலும் சமாதானம் செய்தனர். அப்போது, ஒரு வார காலத்தில் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சி யின் விளைவால் ஜன. 22-ம் தேதி படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. அதன்படி, படகுகள் வெள்ளிக்கிழமை காலை மீனவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

இதையடுத்து, தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து நாகை மீனவர்கள் புறப்பட்டனர். பல நாட்களாகப் பராமரிக்கப் படாமல் இருந்ததால், படகு களை மெதுவாக இயக்க வேண்டியுள்ளதால் வெள்ளிக் கிழமை இரவுக்கு மேல் அவர்கள் நாகப்பட்டினம் துறை முகத்தை வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45 நாட்களுக்கும் மேலாக இலங்கையில் இருந்த மீனவர்கள், ஊர் திரும்புவதையொட்டி அக்கரைப்பேட்டை பகுதியில் மீனவர்களின் உறவினர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x