Last Updated : 22 Feb, 2017 12:39 PM

 

Published : 22 Feb 2017 12:39 PM
Last Updated : 22 Feb 2017 12:39 PM

ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கலான மனு சென்னைக்கு மாற்றம்

தமிழக சட்டபேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கலான மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்ஏல்ஏ தாமரைக்கனியின் மகன் டி.ஆனழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருந்ததாவது:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக சிறப்பாக பணிபுரிந்தார். அதிமுக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றதும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்த ராஜினமா செய்ய வைத்தனர்.

பின்னர் எம்எல்ஏக்கள் சசிகலாவை முதல்வராகவும் தேர்வு செய்தனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் 129 பேரையும் கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பினர் சிறை வைத்தனர். சில எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரால் முதல்வராக பதவியேற்க முடியாமல்போனது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர்.

அவரை முதல்வராக நியமனம் செய்த ஆளுநர், 15 நாளில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி சட்டசபையில் பிப். 18-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கின்றனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் எம்எல்ஏக்கள் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் திறந்த மனதுடன் செயல்பட்டு வாக்களிக்க முடியும். இதனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டசபையில் திமுக, காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட்டு, திமுக உறுப்பினர்களை முழுமையாக வெளியேற்றிவிட்டு எண்ணி கழித்தல் முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பழனிச்சாமி வெற்றிப்பெற்றதாக அறிவித்தார்.

எம்எல்ஏக்களை குறிப்பிட்ட நாட்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்து, அவர்களை சுதந்திரமாக நடமாடவிடாமல், விடுதியில் இருந்தபடியே வாக்களிக்க அழைத்து வந்துள்ளனர். எம்எல்ஏக்கள் கால்நடைகள் போல் நடத்தப்பட்டுள்ளனர். எம்எல்ஏ ஒருவரை அவரது தாயாரின் இறுதி சடங்கில் கூட பங்கேற்கவிடவில்லை.

இந்த நெருக்கடியான சூழலில் பகிரங்க வாக்கெடுப்பில் பழனிச்சாமி அரசு வெற்றிப்பெற்றதாக அறிவித்தது செல்லாது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் பழனிச்சாமி அரசு தோற்றிருக்கும். எனவே, சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, இதே கோரிக்கைக்காக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்து, அந்த முதல் அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x