Published : 07 Oct 2014 10:30 AM
Last Updated : 07 Oct 2014 10:30 AM

தேசிய திறனாய்வுத் தேர்வு 19-ம் தேதி நடைபெறுகிறது

தேசிய திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) அறிவித்துள்ளது.

பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை தேசிய அளவில் தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்காக மத்திய அரசு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

என்சிஇஆர்டி நடத்தும் இந்த தேர்வு 2 கட்டங்களை கொண்டது. முதல் தேர்வு மாநில அளவிலும், 2-வது தேர்வு தேசிய அளவிலும் நடத்தப்படும்.

அந்த வகையில், 2013-2014-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான 2-வது கட்டதேர்வு கடந்த மே மாதம் 11-ம் தேதி சென்னை உட்பட நாடு முழுவதும் நடைபெறுவதாக இருந்தது. நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக திடீரென கடைசி நேரத்தில் இத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மையங்களில் அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் என்று என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,250-ம், இளங்கலை, முதுகலை படிக்கும்போது மாதம்தோறும் ரூ.2,000-ம் உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x