Published : 14 Feb 2014 03:13 PM
Last Updated : 14 Feb 2014 03:13 PM

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக போராட்டம்: லண்டன் வாழ் தமிழர்களுக்கு வைகோ அழைப்பு

காமன்வெல்த் அமைப்பின் தலைவராக பதவியேற்கவுள்ள ராஜபக்‌ஷேவை எதிர்த்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஹிட்லரின் நாஜி படைகள் கூட செய்யாத மிகக் கொடூரமான அழிவுகளை ஈழத் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசின் இராணுவத்தினர் செய்தனர் என்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அண்மையில் மன்னார் மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள், குழாய்கள் பதிப்பதற்காக மண்ணை அகழ்ந்தபோது வெளிப்பட்டன.

2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி, சேனல்-4 காணொளியில் 8 இளம் தமிழர்கள் கைகள் கண்கள் கட்டப்பட்டு, நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி மனிதாபிமானம் உள்ளோர் மனங்களை உலுக்கியது.

தமிழர்கள் நெஞ்சில் விழுந்த பேரிடி என 2010 டிசம்பர் 2 ஆம் தேதி அதே சேனல்-4 காணொளியில், இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட காட்சி தமிழ் இனப்படுகொலையின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்தியது.

பாலச்சந்திரன், மார்பிலே 5 குண்டுகள் தாங்கி பூமியில் கிடந்த காட்சியை சேனல்-4 இல் கண்டு தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எரிமலையாய் சீறினார்கள்.

இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்த இனக்கொலை குற்றத்துக்கு ‘சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை வேண்டும்’ என்ற ஆவேச முழக்கம், மார்ச் 10 ஆம் தேதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் விண்முட்ட எழுவதற்கு புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்கள் சங்கமிக்க உள்ளனர்.

அதற்கு ஆயத்தப்படுத்தவும், நீதி கேட்கும் குரல் உலகெங்கிலும் ஒலிக்கவும் பிப்ரவரி 26 ஆம் தேதி, தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் தன்மானத் தமிழர்கள் சாதி, மதம், கட்சிகள் கடந்து நீதி கேட்கும் போர் முழக்கத்தை எழுப்பிட தயாராகிக்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில், மகிந்த ராஜபக்சே மார்ச் 10 ஆம் தேதி இலண்டனில் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளார். கூண்டில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய மகிந்த ராஜபக்சேவுக்கு காமன்வெல்த் அமைப்பு தலைவராக முடிசூட்டியது மன்னிக்க முடியாததாகும்.

முருகதாசன் தீக்குளித்து மடிந்த மார்ச் 10 ஆம் தேதியில், தமிழர்கள் ஜெனீவாவில் நீதி கேட்டு அறப்போர் நடத்தும் நாளில், லண்டனில் பதவியேற்பு விழாவுக்கு திட்டமிட்டுள்ளார்.

முன்பு லண்டன் மாநகரிலே ஈழத் தமிழர்கள் ஆர்த்தெழுந்து சிங்கள அதிபரை விரட்டி அடித்த அதே பாடத்தை மீண்டும் புகட்ட வேண்டும். ‘பிரித்தானிய மண்ணுக்குள் நுழையாதே! இங்கிலாந்து அரசே இந்த அநீதிக்குத் துணைபோகாதே!’ எனும் அறப்போருக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x