Published : 04 Dec 2013 11:00 AM
Last Updated : 04 Dec 2013 11:00 AM

கால்வாயில் கத்தை கத்தையாக சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள் - ஆவடியில் பரபரப்பு

ஆவடியில் கழிவுநீர் கால்வாயில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில் உள்ளது பக்தவச்சலபுரம் 2-வது தெரு. இங்கு கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை காலை ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை, அவ்வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் கண்டனர். அவர்கள் ஓடிச் சென்று அந்தப் பணத்தை எடுத்தனர்.

அதற்குள் கால்வாயில் பணம் மிதக்கும் விஷயம் காட்டுத் தீ போல் பரவியது.

தகவல் அறிந்து, நகராட்சி துப்புரவு ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செல்லமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, கால்வாயில் தூர்வாரினர். அப்போது, 10 ரூபாய் கட்டுகளையும், மற்றும் 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளையும் கால்வாயிலிருந்து எடுத்தனர். எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நல்ல நோட்டுகள் ஆகும்.

இந்தப் பணம் ஏதாவது ஹவாலா பணமா அல்லது கொள்ளையர்கள் யாராவது போட்டுவிட்டு சென்றனரா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாயில் பணம் கிடந்த சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x