

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 1,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இவர்கள் அன்று இரவு தலைமன்னார் அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், கமலஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த லொயோலா, இன்பம், மாரியப்பன், குணா, குமார், ராஜேஷ், பாபு, ஜான்சன் ஆகியோரை சிறைபிடித்து விசைப்படகை கைப்பற்றினர். இதேபோல் ஜெகதாபட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடலுக்குச் சென்ற நாகை பாலமுருகனின் விசைப்படகை நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைப் பற்றினர்.
அதில் இருந்த தங்கராஜ், தாஸ், அப்பு, அழகேந்திரன், முருகா னந்தம், சின்னப்பால், வடிவேலு, சேகர் ஆகிய 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெகதாபட்டினம் மீனவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.