Published : 10 Jan 2017 09:25 AM
Last Updated : 10 Jan 2017 09:25 AM

தமிழகத்தில் 1.80 கோடி குடும்பங்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட சிறப்பு பொங்கல் பரிசு விநியோகம்: முதல்வர் ஓபிஎஸ் தொடங்கிவைத்தார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள் ளிட்டவை அடங்கிய சிறப்பு பொங் கல் பரிசுப் பை விநியோகத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரிசி வாங்குவோர், காவலர், இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் வசிப்போர் என ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

அதன்பின் அதிமுக ஆட்சியில் வெல்லம், பாசிப்பருப்பு போன்ற பொருட்கள் நிறுத்தப்பட்டு அதற்கு பதில் ரூ.100 வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ரூ.100 ரொக்கப் பரிசுடன் கூடுதலாக இரண்டு அடி நீள கரும்பும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டி கையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3-ம் தேதி அறிவித்தார். வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அன்னை சத்யா நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப் பையை அவர் வழங்கினார்.

தொடங்கியது விநியோகம்

தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத்துறைகளின் கீழ் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததும், நேற்று மாலை முதலே நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுப் பை விநியோகம் தொடங்கியது. இத்திட்டத்துக்கான பச்சரிசி, சர்க்கரை ஏற்கெனவே பொது விநியோக திட்டத்தில் உள்ளதால், அப்பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ளன.

மற்ற பொருட்களான முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை கூட்டுறவுத்துறையால் கொள் முதல் செய்யப்பட்டு, முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்ற அளவில் வழங்கப்பட்டது. அதேபோல கரும்பும் கூட்டுறவுத்துறையால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இத்தொகுப்பு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x