Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவு திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வருகிற 30, 31-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2,881 காலியிடங்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர்.

உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக, தமிழ் பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாட தேர்வு முடிவு கடந்த அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்த வழக்கில், தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிவு வெளியிட கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது.

தேர்வு முடிவு

இந்த நிலையில், முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுடன் இறுதி கீ ஆன்சர் பட்டியலும், தேர்வில் வெற்றிபெற்ற 694 பேரின் பட்டியலும் வெளியானது.

முதுகலை தமிழாசிரியர் பணிக்கான மொத்த காலியிடங்கள் 605 என்ற போதிலும், ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது.

எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 30, 31-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. திருச்சி, விழுப்புரம், வேலூர், சேலம், மதுரை ஆகிய 5 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதற்கான அழைப்புக்கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எந்தெந்த மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்ற விவரமும் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x