

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் குரல் கொடுக்க வேண்டிய இந்திய அரசு, இலங்கை அதிபரின் தம்பியை ரகசியமாக அழைத்து உறவாடி மகிழ்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
தமிழக மீன்வர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கை எப்போது முடியும்?
நம் மீனவர்களின் நிலைக்காக மற்றும் தமிழர்களின் நிலைக்காக உலகம் முழுவதும் மனித நேயம் கொண்ட அனைவரும் வருந்துகிறார்கள். ஆனால், இத்தகைய நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய இந்திய அரசோ, ராஜபக்சேவின் தம்பியை ரகசியமாக அழைத்து கைகுலுக்கி உறவாடி உவகையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை டிசம்பர் 16-ம் தேதி வரை காவலில் வைக்க ராமநாதபுரம் இரண்டாவது குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறாரே?
கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனும், பிலால் மாலிக்கும் முருகனை கொலை செய்தது தாங்கள்தான் என்று ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள். காவல்துறையினர் சொல்வதற்கும், பக்ருதீன் கூறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. எதுதான் உண்மை?
அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ராஜேந்திர பாலாஜி 8 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருக்கிறார் என்றும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதே?
ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டு காலத்திலேயே ஒவ்வொரு அமைச்சர் மீதும் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், அமைச்சர்களாக நீடிக்கிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.